மன்னார் - வவுனியா இரவு பஸ் சேவையின்றி பயணிகள் அவதி _
>> Wednesday, 30 December 2009
மன்னாரில் சகல அரச பஸ்களும் இரவு சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் மன்னார் - வவுனியா இடையேயான போக்குவரத்து சேவை மட்டும் மாலை 5.30 மணியுடன் நிறுத்தப்படுகின்றது.
நாட்டின் வட பகுதிகளில் ஒன்றான வன்னி மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்குth திரும்பியிருக்கின்ற போதும், மன்னாரில் இருந்து வவுனியாவுக்கான பஸ் போக்குவரத்து மாலை நேரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனால் பயணிகள் தமது கடமைகளை முடித்தக் கொண்டு இருப்பிடங்களுக்குச் செல்வதற்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்புக்கு ரயிலில் செல்ல விரும்பும் பயணிகள், வவுனியா சென்றே இரவு யாழ்தேவியில் தமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் பலமணி நேரம் முன்னதாகவே வவுனியா செல்ல வேண்டியிருக்கின்றது இதனால் அவர்கள் பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
மன்னாரில் இரவில் மூன்று தனியார் பஸ்களும் ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்ஸும் ஒரு அரச பஸ்ஸும் நள்ளிரவு 12.00 மணிவரை மதவாச்சியூடாக கொழும்பு சேவையில் ஈடுபடுகின்றன. இச்சேவையூடாக வவுனியா செல்ல வேண்டுமாயின் மதவாச்சி சென்றே அங்கிருந்து வவுனியா செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே மன்னார் - வவுனியா இரவு நேர பஸ் சேவை ஒன்றை ஆரம்பித்து மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரப்படுகின்றது