பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்!
>> Friday, 4 December 2009
மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் யுத்தத்தினால் அப்பகுதியில் உள்ள பரப்பாண் கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுக்குளம், பாலைத்தாள்வு, அடைக்கலகோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிப்படைந்து இருந்தது.
எனினும் தற்போது தற்காலிக பாடசாலை ஒன்று சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. எனினும் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் தாம் கல்வி கற்பதாகவும் உடனடியாக தங்களுடைய பாடசாலையினை திருத்தி தருமாறு அப்பகுதி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.