20 வருடங்களுக்குப் பின் மாந்தை-எள்ளுப்பிட்டியில் மீள்குடியேற்றங்கள் ஆரம்பம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
>> Friday 18 December 2009
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட எள்ளுப்பிட்டிக் கிராமத்தில் சுமார் இருபது வருடங்களின் பின் மீள்குடியேற்றங்கள் இன்று ஆரம்பம் ஆயின.
நாட்டின் அன்றைய யுத்தச் சூழ்நிலை காரணமாக இக்கிராமத்தில் இருந்து 90 களில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.
மன்னார் பிரதேச செயல பிரிவில் உள்ள பல இடங்களிலும் இவ்வளவு காலமாக இவர்கள் தற்காலிகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். மன்னார் பிரதேச செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டி மேலின் நேரடி மேற்பார்வையில் சுமார் 50 குடும்பங்களின் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றன.
மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து காலை 9.00 மணியளவில் இரு பேரூந்துகளில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களின் உடைமைகள் பார ஊர்திகள் இரண்டில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டன. மீள்குடியேற்றப்பட்ட அனைவருக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
வீடமைப்பு மானியங்கள் , கொடுப்பனவுகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ இம்மக்களை நேரில் பார்வையிட்டார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா எட்டுப் பைக்கெற் சீமெந்தும், இருபது தகரங்களும் வழங்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இக்கிராமத்தை அபிவிருத்தி செய்கின்றமைக்கு இயலுமான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார் என்று அவர் அங்கு உறுதிமொழி வழங்கி உள்ளார்.