திருக்கேதீஸ்வரம் ஆலயப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது
>> Friday, 27 November 2009
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒருகட்டமாக வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தையும் சூழவுள்ள பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சிவராத்திரி தினத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்திற்காக 27 கோடி ரூபா நிதி அவசியம் மதிப்பிடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முதல்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதிகள் மற்றும் பாலாவி தீர்த்தகுளம் ஆகியன புனரமைப்படவுள்ளன.
இதுதவிர, நீர்பாசன வசதிகளை உரியவகையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரண்டாவது கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஆலயத்தின் உள்ளகவீதிகள், அறநெறி பாடசாலைக்கான கட்டிடங்கள், கலாச்சார மண்டபம், ஓய்வறை, மற்றும் தியான நிலையம் என்பன புனரமைக்கப்படவுள்ளன.
அத்துடன், வீதிவிளக்குகள் புதிதாக பொருத்தப்படவுள்ள அதேவேளை, தெப்பைக்குளம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 400 வருடங்கள் பழைமையான திருக்கேதீஸ்வரம், சிவன் ஆலயத்தின் பாலாவி தீர்த்ததை பக்தர்கள் புனித தீர்த்தமாக போற்றுவது வழக்கம்.